சசிகலா விடுதலையாகும் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கர்நாடக உளவுத்துறை சிறை நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
நீதிமன்ற உத்தரவுப்படி அபராத தொகை 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருந்தார். இதன் வாயிலாக அவரது தண்டனை காலம் முடிவுக்கு வருகிறது.
ஜனவரி 27ல் விடுதலை ஆவார் என கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்திருந்தது.
சசிகலா விடுதலை நாளன்று பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து கர்நாடக உளவுத்துறை பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு தற்போது அறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், சசிகலா விடுதலை செய்யும்போது அவரை அழைத்து செல்ல ஏராளமான தொண்டர்கள் வரலாம்.
அன்றைய தினம் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் சிறை பகுதிக்கு வராத வகையில் எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும்.
அவரது பாதுகாப்பை கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிட வேண்டும். மற்ற கைதிகள் போன்று இரவு 7:00 மணிக்கு பதில் இரவு 9:30 மணிக்கு விடுதலை செய்யலாம்.
மேலும் அவரை கர்நாடக தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை பாதுகாப்புடன் அழைத்து சென்று விட்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய சூழ்நிலை பொறுத்து சில மாற்றங்கள் செய்யவும் சிறைத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!