கொரோனா விவகாரத்தில் முதல் முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட ரஷ்யா!

கொரோனா பெருந்தொற்றால் உலகில் மூன்றாவதாக அதிக மரண எண்ணிக்கையை எதிர்கொண்டுள்ளதாக ரஷ்ய முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுவரை அந்த நாடு வெளியிட்டு வந்த மரண எண்ணிக்கையில் இருந்து இது மூன்று மடங்கு அதிகமாகும். மட்டுமின்றி ரஷ்யாவின் கொரோனா மரண எண்ணிக்கையானது பிரித்தானியா அல்லது அமெரிக்காவை விட தனிநபர் விகிதத்தில் அதிகம் எனவும் தற்போது தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவல் தொடங்கிய நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை ரஷ்யாவில் 186,057 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக திங்களன்று உத்தியோகப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை அந்த நாடு வெறும் 55,265 பேர் மட்டுமே கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவித்து வந்தது.

மட்டுமின்றி, எஞ்சிய நாடுகளை விட கொரோனா பெருந்தொற்றை ரஷ்யா சிறப்பாக கையாண்டு வந்ததாக ஜனாதிபதி புடின் பெருமைபாராட்டியும் வந்துள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்று விலாவாரியாக வெளியிட்டுள்ள மரண எண்ணிக்கையை ரஷ்ய துணை பிரதமரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ரஷ்யாவை விட அமெரிக்காவில் 330,000 பேர் இறந்துள்ளனர், பிரேசில் நாட்டில் 191,000 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

ஆனால் சான் மரினோ மற்றும் பெல்ஜியம் மட்டுமே தங்கள் மக்கள்தொகையின் அளவிற்கு அதிகமான கொரோனா உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன.

ரஷ்யாவை பொறுத்தமட்டில் 100,000 பேருக்கு 37.8 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாக அறிக்கை வெளியிட்டு வந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 128.7 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இந்த எண்ணிக்கையானது 107.11 எனவும் அமெரிக்காவில் 102.34 எனவும் உள்ளது.

மேலும், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ரஷ்ய சுகாதார அதிகாரிகள் 3 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய் பாதிப்புகளை பதிவு செய்துள்ளனர்.

ஆனால் உலகில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளை விடவும் மிக குறைந்த எண்ணிக்கையிலான இறப்பு விகிதத்தையே வெளியிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!