தொற்றுடன் உயிரிழந்த 4 கைதிகளையும் தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் உடல்களை தகனம் செய்யுமாறு, வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த கைதிகளின் உடல்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் நிபுணர் குழுவினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பான வழக்கு, வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தில் முன்னிலையான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என தெரிவித்தார்.

இதன்படி, குறித்த 4 கைதிகளினதும் உடல்களை தகனம் செய்யுமாறு, வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!