அத்தியாவசிய பொருட்கள் பத்திற்கு நிர்ணய விலை – சதொசவில் மட்டும்

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலையை பேணுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. நிர்ணய விலையில் நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு நிர்ணய விலையை பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், நிர்ணய விலையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கக் கூடியவர்களிடமிருந்து விலைமனுக்களை கோரவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

அடுத்த மாதம் முதல் இந்த திட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, டின் மீன் உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் நிர்ணய விலையில் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!