5 நாட்களில் 23 பேருக்கு தொற்று!

வடக்கு மாகாணத்தில், டிசெம்பர் மாதத்தில் மட்டும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், ஐனவரி மாதத்தின் ஐந்து நாள்களில் மட்டும் 24 பேருக்கு இதுவரையில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

யாழ். – பண்ணையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிமனையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ யாழ்ப்பாணம் – மருதனார்மடம் கொத்தணியிலேயே அதிகளவானோருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இதனாலேயே, கடந்த டிசெம்பர் மாதத்தில் வடக்கில் அதிகளவானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது எனவும் கூறினார்.

‘இதில், யாழ்ப்பாணத்தில் – 135, முல்லைத்தீவில் – 2, கிளிநொச்சியில் – 5, வவுனியாவில் – 10, மன்னாரில் – 1 என தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘இதேவேளையில், ஐனவரி மாதத்தின் இன்று வரையான ஐந்து நாள்களில் மட்டும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், யாழ்ப்பாணத்தில் – 11 பேருக்கும் வவுனியாவில் – 7 பேருக்கும் மன்னாரில் – 5 பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘அதே நேரம் இந்த மாதத்தில் இதுவரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் அவதானமாகவும் பொறுப்புணர்வோடும் செயற்பட வேண்டும்’ எனவும், அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!