வவுனியாவில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் நடத்தப்பட்ட பிசீஆர் பரிசோதனையில், 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் உட்செல்ல மற்றும் வெளிச் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதனால் நேற்று காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிஸாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மதியம் வெளியானதில் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் பசார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதி என்பன சற்று முன்னர் முற்றாக முடக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதியாகியவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!