மன்னாரில் 7,727 வாக்காளர்கள் நீக்கம்!

மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடித்தில், “வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறையூடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும் அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர்.

இந்த வாக்காளர்கள் அனைவரும் மீள்குடியேற்றத்துக்காக சொந்த மண்ணுக்குச் சென்று குடியேறியபோதும் போதிய வசதிகள் இன்றி மீள்குடியேறிய இடங்களிலிருந்து தற்காலிகமாக மீண்டும் புத்தளத்துக்கு வந்துள்ளனர்.

இவர்கள், மீள்குடியேறிய பிரதேசங்களில் உரிய வசதிகள் கிடைத்தவுடன் மீண்டும் அங்கு செல்வதற்கு விருப்பத்துடன் இருக்கின்றனர். அவ்வாறு ஆர்வத்துடன் இருக்கின்றவர்களின் வாக்குப் பதிவுகளை பலவந்தமாக நீக்கியமை மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.

இவ்வாறு, வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நாட்டின் பிரஜை ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகள் இருப்பதற்காக, சொந்த மாவட்டத்திலுள்ள வாக்காளர் இடாப்பை மாற்ற முடியாது. கொழும்பில் வசிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மெதமுலானையில் வாக்களிக்கிறார். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அத்தனகல்ல மற்றும் பொலனறுவையிலேயே வாக்களிக்கின்றனர்.

அவர்களுக்கு இவ்வாறான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றால் ஏன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, புத்தளத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு வாக்குரிமையை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது?

எனவே, மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரால் வாக்களிப்பதற்கு தடுக்கப்பட்ட ஏழாயிரத்து 727 வாக்காளர்களையும் அவர்களது சொந்த மாவட்ட வாக்காளர் இடாப்பில் மீளப் பதிவுசெய்து, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும்.

இதன்படி, மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட இரண்டாயிரத்து 618 பேர், முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட மூவாயிரத்து 452 பேர், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட ஆயிரத்து 217 பேர், நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட 457 பேர் மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட 342 வாக்காளர்களையும் சொந்த மாவட்டத்தில் வாக்களிக்க ஆவன செய்யவேண்டும்” என ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!