டிராக்டர் பேரணியில் மோதல்: 6 விவசாய சங்க தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தில் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.

முன்கூட்டியே பேரணியைத் தொடங்கியதாலும், அனுமதித்ததற்கு மாறான பாதையில் டிராக்டர்கள் சென்றதாலும் காவல்துறையினர் தடுத்ததாகவும், விவசாயிகள் டிராக்டர்களால் மோதித் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 ழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 பேரைக் கைது செய்துள்ளனர். ஆறு விவசாய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது சதி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

விவசாயி தலைவர்கள் இன்று விவசாயிகளை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.பிப்ரவரி 1 ம் தேதி விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.

டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட டெல்லியின் சில பகுதிகளில் இண்டர் நேட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!