கிழக்கு முனையம் குறித்து இறுதி முடிவெடுக்கவில்லை!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் இறுதி தீர்மானத்தை எடுக்கவில்லை. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில் இறுதி தருணத்தில் மாற்றம் ஏற்பட்டால், இவ்விடயம் குறித்து பலதரப்பட்ட மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் யோசனைகள் மாத்திரம் முன்வைக்கபட்டுள்ளதே தவிர தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. துறைமுக ஊழியர் சங்கம்,துறைமுக பொறியியலாளர் சங்கம் முன்வைத்த யோசனைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படுகிறது. ஆகவே இவ்விடயம் குறித்து ஒருசில தவறான அபிப்ராயங்கள் சமூகமட்டத்தில் குறிப்பிடப்படுகின்றன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை அபிவிருத்தி செய்யும் உரிமம் 51-49 வீத அடிப்படையில் பகிரப்படும் யோசனை மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் துறைமுக,கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் வழங்கும் அறிக்கை பாராளுமன்றுக்கு அறிவிக்கப்படும் அதன் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்ட யோசனைகள் பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இறுதி தருணத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். கிழக்கு முனையம் தொடர்பிலான அறிக்கை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு பகிரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக ஊழியர் சங்கத்தினர் இவ்வாரம் மாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர். கிழக்கு முனையத்தை பாதுகாக்க தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட முன்னர் மாநாயக்க தேரர்களின் ஆதரவை பெற்றுக் கொள்வது அவசியம் என துறைமுக ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!