கொரோனா தடுப்பூசி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினியின் கருத்து!

இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் முதலாவது நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் தேசிய தடுப்பூசி திட்டத்தினை எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்பார்த்ததை விட விரைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மேல் மாகாணத்தின் ஆறு வைத்தியசாலைகளில் இன்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், குறித்த தடுப்பூசியினை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்

அத்துடன், இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட COVISheild தடுப்பூசிகளை தவிர்த்து, மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!