இராணுவத்தினரே சுட்டனர்!

இராணுவத்தினரை நாம் சுடவில்லை எம்மை நோக்கி இராணுவத்தினரே துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள் என்று வவுனியா – செட்டிகுளம் காட்டுப்பகுதி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஒருவர் செட்டிகுளம் காட்டுபகுதியில் மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் “காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குழு மீது பதிலுக்கு இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்திருந்தது.

இதனை மறுத்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், “மூன்று பேராக பேராறு காட்டுப்பகுதிக்கு மரம் வெட்ட சென்று, நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இராணுவத்தை கண்டு ஓடினோம். இதன்போது தங்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டனர்” என தெரிவித்துள்ளனர்.

தாம் சுடவில்லை என்றும், ஆயுதங்களும் வைத்திருக்கவில்லை எனவும், ஆனால் தாம் சுட்டதாகவே இராணுவத்தினர் முறைப்பாடு கொடுத்துள்ளனர் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!