சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் சதி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணி இலங்கையை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் சதி முயற்சி என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தமிழ்பேசும் மக்களின் நீதிக்கான பேரணி தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசியதாவது,

“நாட்டின் ஆட்சியை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டதாகவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட மனித உரிமை சபையின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அரசின் ஒருசில துறைகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையே இவர்களின் பிரச்சினையாக உள்ளது. எனினும், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது மற்றும் தகுதியான இராணுவத்தினரை உரிய துறைகளில் ஈடுபடுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பன எந்த விதத்திலும் தவறான நகர்வுகள் அல்ல.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனை எழுத்து மூலம் அனுப்பியுள்ளோம். இதேவேளை, ஆணையாளரின் அறிக்கையை அரசு ஆதரிப்பதாகக் கூறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நாம் பொறுப்பு இல்லை.

இந்தநிலையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணியானது இலங்கையை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் சதி முயற்சி என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!