கைக்குழந்தையுடன் பணியாற்றும் பெண் காவலர்: உயரதிகாரிகளுக்கு வலுக்கும் கண்டனம்!

சண்டிகரை சேர்ந்த ஒரு பெண் காவலர் தனது கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சண்டிகர் நகர் போக்குவரத்து காவல்பிரிவில் பணிபுரிபவர் பிரியங்கா. இவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. இவரது உயரதிகாரிகள் காலை 8 மணி முதல் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியை ஒதுக்கியுள்ளனர்.

ஆனால் இவர் கைக்குழந்தையைக் கவனிக்க வேண்டி உள்ளதால் காலை நேரத்தில் பணிக்கு வரமுடியாது என்றும் நேரத்தை மாற்றிக் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். ஆனால் அவரை அவசியம் பணிக்கு வருமாறு வலியுறுத்தியதாகவும் இதனால் அவருக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே பிரியங்கா தனது கைக்குழந்தையை எடுத்துச் சென்று குழந்தையுடன் பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு, வீடியோவாக ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்ய அது வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை கண்ட சில நெட்டிசனகள் அந்த பெண்ணின் கடமை உணர்வைப் பாராட்டி உள்ளனர். அதே வேளையில் பலர் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஒரு பெண் காவலரைப் பணிபுரிய வைத்த உயரதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!