அரசதரப்பு போராட்டக்காரர்கள் மாநகர சபை உறுப்பினருடன் முரண்டு!

நல்லூரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறும் அரச தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும், யாழ் மாநகர சபை உறுப்பினருக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லூரில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் பொலிஸாரின் பாதுகாப்போடு அனுமதி பெறாது கொட்டகை அமைத்து நேற்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களாலும் கடத்தப்பட்டு,கொல்லப்பட்டோருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ் சிவில் சமுக அமைப்பு எனும் குழுவினரால் குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று குறித்த இடத்தில் அனுமதி பெறப்படாது கொட்டகை அமைக்கப்பட்டமை தவறு எனவும் , உடனடியாக இன்று இரவிற்குள் அகற்றுமாறும் தெரிவித்து யாழ்ப்பாண மாநகர முதல்வரின் எழுத்து மூலமான கடிதம் ஒன்றினை வழங்குவதற்கு மாநகர சபை உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.

முதல்வரின் எழுத்துமூலமான கடிதத்தினை மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் வாசித்து காண்பித்தபோது போராட்டக்காரர்களுக்கும் மாநகர சபை உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதோடு நீதிமன்ற அனுமதி பெற்றால் மாத்திரமே இவர்களை இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!