வடக்கில் நேற்றும் 4 கொரோனா தொற்றாளர்கள்!

வடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தில் மூவரும், மன்னாரில் ஒருவரும் கோவிட் – 19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 294 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட கொக்குவிலைச் சேர்ந்த 83 வயது பெண்ணுக்குக் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 32 வயது பெண்ணுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர் ஏற்கனவே தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்.

இதேவேளை, சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இவரும் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் நேரடித் தொடர்புடையவர்.

அத்தோடு, மன்னார் நகரைச் சேர்ந்த ஆண் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்குக் கோவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!