கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்டமூலமானது அரசியலமைப்பை மீறும் வகையில் உருவாக்கபட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பிரதம நீதியரசரான ஜயந்த ஜயசூரிய தலைமையிலான இந்த குழுவில் நீதிபதிகளான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் த சில்வா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளன.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுவாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமென உத்தரவிடுமாறும் மனுத்தாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சட்டமூலத்தின் 6 ஆவது சரத்தின் முதலாம் பிரிவில் கொழும்பு துறைமுகநகரத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்றுமதி மற்றும் வியாபார நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான தீர்மானம் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு மாத்திரம் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்த சட்டமூலமானது பாரிய அச்சுறுத்தலாக அமையுமெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துறைமுக நகரத்தில் தொழில் புரியும் ஊழியர்களுக்கான வீசா விநியோகிப்பது முதல் அதற்கான அனுமதி வழங்குவதற்கான அதிகாரமும் பொருளாதார ஆணைக்குழுவுக்கே உள்ளதாக சட்டமூலத்தின் சரத்தொன்றில் தெரிவிக்கபட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இதனால், இந்த சட்டமூலம் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துமெனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!