முல்லைத்தீவில் தமிழர் நிலங்களை அபகரிக்க முயற்சி!

முல்லைத்தீவில் பல கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குள் கொண்டு செல்வது முழுமையாகத் தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து, அதனை சிங்கள மயமாக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே கருதுகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே கரைதுறைபற்று பிரதேச சபை பிரிவில் இருக்கக்கூடிய கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, செம்மலை ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்குமாறு அரசாங்கத்தினுடைய உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலகத்துக்கு அவசரமாக நேற்றையதினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இவ்வாறான ஒரு செயற்பாடு நடைபெறப்போகிறது என்பதை அறிந்து வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பல பிரதிநிதிகள் தொடர்புகொண்டு அதனைச் செய்யவேண்டாம் என்றும் அது தொடர்பான அமைச்சருடன் ஏற்கனவே பேசியிருக்கின்றோம்,

இந்த விடயம் தொடர்பாக ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என்று இணங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தும் கூட கொழும்பினுடைய அழுத்தம் காரணமாக அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது முழுமையாகத் தமிழர்களிடமிருந்து அந்த நிலங்களை அபகரித்து அதனை முழுமையாக சிங்களமயமாக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே கருதுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!