விபரீதங்களை அரசு விரைவில் சந்திக்க வேண்டி வரும்!

இறுதிப் போரில் சாகடிக்கப்பட்ட எமது உறவுகளை நினைவு கூர்ந்தே முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபியை அமைத்திருந்தோம். அதை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் பாதுகாப்புடன் அரசு அடித்துடைத்துள்ளது. இது அரசின் படுகேவலமான செயலாகும். இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“இறுதிப் போரில் படையினரால் கொன்றழிக்கப்பட்ட எம் உறவுகளை நிம்மதியாக உறங்க விடுங்கள் என்று அரசிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் ஒவ்வொரு இனத்தவர்களும் போரில் இறந்த தமது உறவுகளை நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ் மக்களுக்கு இந்த அனுமதியை தற்போதைய அரசு வழங்க மறுக்கின்றது.

அத்துடன், இறந்த தமிழர்களை நினைவுகூர்ந்து வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் தூபிகளையும் இடித்தழிப்பதில் இந்த அரசு குறியாக இருக்கின்றது. இது நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்ல செயல் அல்ல.

அரசின் பயணத்துக்கு ஆரோக்கியமான செயல் அல்ல. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு உகந்த செயல் அல்ல. இது மிக மோசமான,படுகேவலமான செயலாகும்.

எனவே, இந்தப் படுகேவலமான செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் அதன் விபரீதங்களை அரசு விரைவில் சந்திக்க வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!