அதிகரிக்கும் பதற்றம்: எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த மோதலில் காசா முனையில் 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும் (கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) என மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, (ஹமாஸ் அமைப்பினர்) எங்கள் நாட்டின் தலைநகரை தாக்கியுள்ளனர். எங்கள் நகரங்கள் மீது ராக்கெட்களை ஏவியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் தக்க விலை கொடுத்து வருகின்றனர். தொடர்ந்தும் அவர்கள்(ஹமாஸ்) விலை கொடுப்பார்கள். இது (ஹமாஸ் மீதான தாக்குதல்) இன்னும் முடிவடையவில்லை’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!