நைஜீரியாவில் இரண்டாக பிளந்த படகு: 150 பேர் பரிதாப பலி!

நைஜீரியாவில் பயணிகள் படகு ஒன்று இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 150 பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 5 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதுடன், 40 பேர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இனி எவரும் உயிருடன் தப்ப வாய்ப்பில்லை என்றே உயிர் தப்பியவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். வடமேற்கு நைஜீரியாவில் உள்ள நைஜர் நதியில் புதன்கிழமை சுமார் 200 பேர் படகில் பயணித்துள்ளனர்.

குறித்த படகானது மத்திய நைஜர் மாநிலத்தில் இருந்து வடமேற்கு கெப்பி மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று இரண்டாக பிளந்ததுடன், ஆற்றில் மூழ்கியுள்ளது.

சுமார் 80 பேர் மட்டுமே பயணிக்க போதுமான படகில் 200 பேர் வரை பயணித்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், 150 பேர் என்ன ஆனார்கள் என தகவல் இல்லை.

பெரும்பாலான பயணிகள் தங்க சுரங்க தொழிலாளர்கள் எனவும், அவர்கள் சுரங்கத்தில் இருந்து மணல் மூட்டைகளுடன் பயணப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் சடலங்கள் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!