கடவுளின் பிரசாதம் என்று கூறி கஞ்சாவை கொடுத்து பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாபா!

இந்தியாவில் கடவுளின் பிரசாதம் என்று கூறி, கஞ்சாவை கலந்த இனிப்பை கொடுத்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பாபாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த பங்கரோட்டா பகுதியில் முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வது வழக்கம். பாபா சந்நியாசி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம், தற்போது அவரது மகன் யோகேந்திர மேத்தாவால் (56) நடத்தப்பட்டு வருகிறது.

முகுந்த்புராவைத் தவிர, யோகேந்திர மேத்தாவின் ஆசிரமம் ஒன்று ரத்தல்யா சிகார்-டெல்லி சாலையிலும் உள்ளது. யோகேந்திர மேத்தா தன்னை பாபா சந்நியாசி என்று அழைத்துக் கொண்டு அப்பகுதியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், பாபா சந்நியாசி யோகேந்திர மேத்தா மீது பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஜெய்ப்பூர் பொலிசார் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் முகுந்த்புரா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு கடவுளின் பிரசாதம் எனக்கூறி கஞ்சா கலந்த இனிப்புகளை யோகேந்திர மேத்தா கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பல முறை இப்படி நடந்துள்ளதால், பாதிக்கப்பட்ட பெண் அவர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், என் கணவர் மற்றும் குடும்பத்தினர் அடிக்கடி பாபா கோயிலுக்கு சென்று வருவோம். பாபா அவ்வப்போது ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரமத்திற்கு சென்று வருவோம்.

அப்போது, 4 நாட்கள் வரை ஆசிரமத்திலேயே தங்கி பக்தர்களுக்கு சேவை செய்வோம். ஆரம்பத்தில் ஆசிரமத்தில் எல்லாம் சரியாகதான் சென்றது. கொஞ்ச நாட்களுக்கு பின் பாபா மூலமாக எனக்கு பாலியல் தொந்தரவுகள் தொடங்கின.

தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை பாபாவின் ஆசிரமத்தில் பெண்கள் தங்கியிருக்க அனுமதி அளித்தார். நானும் என்னுடன் சேர்ந்த சில பெண்களும் தங்கினோம். ஒரு நாள் இரவு, என்னிடம் பேசிய பாபா அவர் தங்கியிருக்கும் மேல் மாடிக்கு வரச் சொன்னார்.

கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம் வழங்குவதாக தெரிவித்தார். அந்த பிரசாதத்தை சாப்பிட்டு கடவுளை தியானித்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி அவர் நானே கடவுள் என்றும் கூறினார்.

அங்கு அவர் வைத்திருந்த இனிப்பு பிரசாதத்தை கொடுத்தார். அதனை சாப்பிட்டவுடன் எனக்கு கொஞ்சம் போதை ஏற ஆரம்பித்தது. பின்னர் அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். போதை மயக்கம் தெளிந்த பின்னர், என்னை அங்கிருந்து விடுவித்தார். அன்றிலிருந்து நான் ஆசிரமத்திற்கு செல்லவில்லை. என் கணவரின் விருப்பத்தின் பேரில் 6 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் ஆசிரமத்திற்கு குடும்பத்துடன் சென்றேன்.

அப்போது என்னை அழைத்த பாபா, மீண்டும் எனக்கு பிரசாதம் தருவதாக கூறினார். அதற்கு நான் மறுத்தவுடன், ஆட்களை ஏவி கொலை செய்வதாக அச்சுறுத்தினார். இதனால் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் கணவர் மற்றும் மகளிடம் கூறினேன்.

அவர்கள் உடனடியாக இது குறித்து நியாயம் கேட்பதற்காக, ஆசிரமத்திற்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த பாபாவின் ஆட்கள், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்துடன் காலி செய்துவிடுவோம் என்று மிரட்டினர்.

என்னை போல், மேலும் 4 பெண்கள் பாபாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் கடந்த 5-ஆம் திகதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தலைமறைவாக இருந்த பாபாவை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், பெண் ஒருவர் பாபாவால் நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!