நேற்றைய நாளில் 934 பேருக்கு கொரோனா தொற்று; 45 உயிரிழப்புகள் பதிவு…!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 934 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 919 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 15 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 67 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 68 ஆயிரத்து 90 ஆக காணப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்றின் முதலாம் அலையில் 3 ஆயிரத்து 394 பேரும், இரண்டாவது அலையில் 95 ஆயிரத்து 948 பேரும் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 717 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 36 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 27 ஆயிரத்து 506 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!