30-க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன் உயிரை விட்ட ஓட்டுநர்!

கோபிச்செட்டிப்பாளையம் அருகே திடீர் மாரடைப்பு ஏற்பட்ட பேருந்து ஓட்டுநர் பயணிகளை பத்திரமாக காப்பற்றி விட்டு உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மணியங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.

இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை பணிக்கு திரும்பியுள்ளார். கவுந்தம்பாடியிலிருந்து பெருந்துறைக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளார். பேருந்து வெள்ளாங்கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது செல்வராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு தனது உடலை சமாளித்துக் கொண்டு பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார் செல்வராஜ். ஒரு சில நொடிகளிலேயே ஒரு உயிர் பிரிந்துள்ளது. ஒரு கணம் தப்பி இருந்தாலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்கக்கூடும்.

ஆனால் சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றி விட்டு செல்வராஜ் உயிரைவிட்டது பயணிகளை கண் கலங்க வைத்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிறுவல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!