யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத காலத் திலும் எமது இனம் திட்டமிட்டு பாதிக்கச் செய்யப்படுகின்றது. இதற்கு நாம் தான் முடிவு கட்டவேண்டும் என்று தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.
‘ கல்வி கலாசார பண்பாடுகளுக்கு யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் பெயர்போயிருந்தது. ஆனால் இன்று தலைகீழாக நிலமை மாறிப்போய் விட்டது. வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் ஒருபுறம். போதைப் பொருள் பாவனையின் உச்சம் மறுபுறம். கொள்ளையர்களின் அட்டூழியங்கள் இன்னொருபுறம். காமுகர்களின் கொலைவெறித்தனங்கள் மற்றொருபுறம் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு யாழ்ப்பாணத்தின் நிலமை வந்துள்ளது. இது திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது.
ஒரு வாரத்துக்குள் மூன்று கொடூரச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இடம்பெற்றுள்ளது. ஒரு பள்ளிச் சிறுமி பாடசாலைச் சீருடையுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாள். ஒரு பெண் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றார். இன்னொரு குடும்பப் பெண் கொள்ளையர்களினால் மிருகத்தனமான வன்புணர்வு செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்தக் கொடூரமான கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். சட்டம் ஒழுங்கு குடாநாட்டில் நிலைநாட்டப்பட வேண்டும். மிருகத்தனமான இந்தச் செயல்களுக்கு முடிவுகட்ட கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!