ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கு இருந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின், பொரல்லையில் அமைந்துள்ள வீட்டில் பணியாளராக இருந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீதவான் விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதான தலவாக்கலை – டயகம பகுதியை சேர்ந்த இந்த சிறுமி ஜூலை 3ஆம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைத்து அவர் உயிரிழந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவரது பெற்றோர் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு குறித்த சிறுமியை அழைத்து வந்ததாக பொரல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமையலறைக்கு அடுத்த ஒரு அறையில் அவர் தங்கியிருந்த நிலையில், அங்கு மண்ணெண்ணெய் போத்தலையும், தீயை உண்டாக்கும் கருவியையும் (லைட்டர்) பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது.

உடைகள் தீப்பிடித்துக் கொண்டிருந்தபோது அறையிலிருந்து அவர் வெளியே வந்த நிலையில், வீட்டின் மற்றுமொரு உதவியாளரும் வீட்டிலுள்ளவர்களும் பதியுதீனின் மனைவியுடன் சிறுமியை ஈரமான போர்வையால் மூடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் குடியிருப்பாளர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!