கனடாவில் திறக்கப்படும் சர்வதேச எல்லைகள்: யார்யாருக்கு அனுமதி?

கனடாவில் 16 மாதங்களுக்கு பிறகு சர்வதேச எல்லைகளை திறக்கப்படவுள்ளதாக அறைவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, கனடாவில் கடந்த மார்ச் 2020 முதல்சர்வதேச எல்லைகள் மூடப்பட்டது. அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு, முதற்கட்டமாக வரும் ஆகஸ்ட் 9-ஆம் திகதி முதல் அமெரிக்கா உடனான சர்வதேச எல்லைகளை திறக்கவுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

அன்று முதல் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 7-ஆம் திகதி முதல் மற்ற நாடுகளுக்கு இடையான சர்வதேச போக்குவரத்து தடை நீக்கப்படவுள்ளது.

பயணிகள் தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

முழுமையாக தடுப்பூசி போடாத எந்த வெளிநாட்டு பயணிகளும் கனடாவுக்குள் நுழைய நிச்சயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, ​​ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை மட்டுமே கனடா அங்கீகரித்துள்ளது, அதனால் இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சீனா மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளுக்கு கனடாவில் இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

குறிப்பிடத்தக்க சலுகையாக, தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் கனடாவுக்குள் நுழையும் 12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியதில்லை.

அதேசமயம் கனடாவுக்கு வரும் அனைத்து பயணிகளும், தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், கனடாவிற்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் அல்லது மூலக்கூறு சோதனை முடிவை காட்டவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!