16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது!

16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் அவருடைய தந்தை உட்பட குறித்த சிறுமியை அழைத்துவந்த தரகர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

பொரளை பொலிஸார் உட்பட குற்றப்புலனாய்வு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பணியகம் ஆகியவற்றின் விசேட குழுக்கள் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டுப்பணிப்பெண்ணாக கடமைபுரிந்த 16 வயது சிறுமி ஒருவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

இதேவேளை கைது செய்யப்பட்ட மூவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணித்தியால தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்துவதற்கானஅனுமதி கோரப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டுப்பணிப் பெண்ணான குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் திகதி சிறுமி ஹிசாலினி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!