மனித உரிமை மீறல்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடம்பெறுகின்றன.இதனைப் பல்வேறுபட்ட ஆய்வுத் தகவல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.குறிப்பாக இந்தப் பிரச்சினையை விசேட கவனத்துக்குரிய பேசு பொருளாக கொள்வதுடன், அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசுகளும் அக்கறை கொள்வது அவதானத்துக்குரியது.
இது குறித்ததான உடன்படிக்கைகளும், அனுசரணைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொண்டுவரப்பட்டு, அதிகாரத் தரப்புக்களது ஒப்புதலோடு விடைகளற்ற வினாக்களாக நீண்ட ஓய்வு கொள்கின்றன.
தவிர இவை அனைத்துமே ஆய்வு ரீதியில் எடுத்து நோக்கப்படின், பன்முகத் தன்மை அடைந்திருப்பது கண்கூடு.
‘உரிமை’ அல்லது ‘தீர்வு’
இந்தச் சந்தர்ப்பத்திலே தென்னாசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தேசமாகக் கொள்ளப்படக்கூடிய இலங்கை, ஆழ்ந்த புல னாளுமை சார் நோக்குதற்கு உரியது.இங்கு வாழ்கின்ற சமூகங்களிடையேயான இணக்கப்பாடு என்பது பிராந்திய ரீதியில் பிரித்து ஆராயப்பட வேண்டியது.
பிரதானமாக தமிழர் தாயகத்தின் மீதான அறுபது ஆண்டுகால வன்முறைகள், ஆய்வுநிலைக்குட்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்க் குடிகளின் ஒருமித்த வேண்டுகையான ‘உரிமை’ அல்லது ‘தீர்வு’ என்கின்ற நிலைபெறுதி நோக்கியதான கட்டுமானங்கள் ,ஆக்கபூர்வமான உறுதிப்பாட்டைப் பெற்றிட வழி ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.இதற்கு பன்னாட்டு ரீதியான ஆத்மார்த்தமான பங்களிப்பு வேண்டப்படுகிறது.
குறிப்பாக தமிழர்கள் கொண்டிருந்த மற்றும் தற்காலத்தின் வழி அடித்தளமாகக் கொண்டிருக்கின்ற, இனத்துவம் சார்ந்த, கலாசார,பாரம்பரிய அபிப்பிராயங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட அழிப்புக்கள் குறித்து சிந்தனை கொள்ள வேண்டும்.
அவற்றுக்கான தீர்வு நாடிகள் முன்வைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அனுபவங்கள்,பட்டறிவுகள்,பிரச்சினைகளையும் ட்மீளாய்வு செய்ய வேண்டும்.அதுவே ஆரோக்கியமான செயல்நிலை.
சோக இடுகுறியின் அடையாளமாக தமிழர் தாயகம்
நீண்ட காலப் போர் வலயமாக விளங்கிய தமிழர் தாயகம் ய தார்த் தத்தில் அழிவுகளும், தீராத வடுக்களும் மலிந்து போயுள்ள சோக இடுகுறியாக அடையாளம் பெறுகிறது.
2009ஆம்ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசு, உலக வல்லரசுகளின் தன்னல விசுவாசமான ஆதரவுக் கரங்களோடு, கூட்டாக மேற்கொண்ட இனப் படுகொலை நடவடிக்கை , ஞாபகங்களை விட்டகலாத படிப்பினையாக விளங்குகிறது.
இந்தக்காலப்பகுதியில் இடம்பெற்ற ஆள்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல், பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக செயல்நிலைகள், இலங்கை அரசின் இராணுவம் கொண்டிருந்த கீழ்மைக் குணங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன.
அதன் தொடர்நிலைகள் இன்னமும் இந்தப் பிராந்தியத்தில் தொடர் கின்றன.தமிழர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் தற்போதும் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன.
இவற்றுக் கெதிரான போராட்டங்களை தமிழ்மக்கள் முன்னின்று வலுவாக மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் அவற்றுக்கான பொருத்தமுறு தீர்வுப் பொறிமுறைகள் இதுவரைகாலமும் முன்வைக் கப்பட்டதாகத் தோன்றவில்லை.
பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்களை அழிவு நிலையில் இருந்து வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய பரிகார வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. தனித்து ‘நல்லிணக்கம்’, ‘நல்லாட்சி’ என்ற சொல்லாடல் பரிவட்டங்கள் மாத்திரமே எங்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
அதற்குரித்தான அலங்காரங்களே அரசியல் என்கின்ற ஆக்கவுரிமையின் வெளிப்பாடாகவும், ஜனநாயகப் பிரதிநிதித்து வங்கள் கொள்ளும் வார்த்தை களின் பகுமானமாகவும் காட்டப்படுகின்றன. ஒவ்வோர் சந்தர்ப்பங்களிலும் தேர்தல் ஊர்வலமா கவும்,ஊர்க்கோலமாகவும் சந்தர்ப்பவாத நாவடக்கம் பெறுகிறது.
வலுவற்ற சட்டவாக்கம்
உண்மையில் வன்முறைகளைத் தடுப்பதற்கு அரசினால் உருவாக்கப்பட்டுள்ள சட்டக் கட்டமைப்பானது போதுமானதாக இல்லை.சட்டவாக்கங்கள் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் வெறுமனே புத்தகங் களில் மட்டுமே பொதிந்து போயுள்ளன.
ஒட்டு மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான மீறல்களின் ஆரம்பமாகவும், பிரச்சினை களின் சூட்சுமமாகவும் இலங்கை அரசின் செயல்வெளி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சொல்லிணக்க விளம்பலாக பன்னாடுகளின் சமூக வெளியில் உலாவருகிறது.
வன்முறைகள் குறித்த மீளாய்வு
இந்தச் சந்தர்ப்பத்திலே கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை பற்றி விவாதிப்பதற்காக கூடிய சித்திர வதைக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழுவின் 59 ஆவது கூட்டத்தொடர் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதில் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற சித்திர வதை, ஆள்கடத்தல் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்த மீளாய்வு இடம்பெற்றது.இறுதியாக கடந்த 2011ஆம் ஆண்டு இது குறித்ததான மீளாய்வுகள் இடம்பெற்றிருந்தமையும் கவனத்துக்குரியது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் அப்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 11 பேர் கொண்டு குழு பங்குபற்றியிருந்தது.இந்தக் குழுவில் இலங்கை தேசிய புலனாய்வு தலைமை அதிகாரி, இளைப்பாறிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிசும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது ஐ.நா அதிகாரிகள், இலங்கையில் இடம்பெற்ற மேற்படி வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிவினரே விளங்கு கின்றனர். இது குறித்து பதிலளிக்க வேண்டும் என தொடர்ச்சியான கேள்விகளை முன்வைத்தனர்.
பொறுப்புக் கூறலின் வெறுமை
இதன்போது ஐ.நா அதிகாரியொருவர், “என்னிடம் வேறு சில குறிப் பிடத்தக்க கேள்விகள் இருக்கின்றன.நான் ‘மனிக்பாம்’ முகாம் குறித்துக் கேட்டிருந்தேன். போர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் முறைகேடான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டிருந்தேன்.
இவை ‘மனிக்பாம்’ முகாம் அமைந்திருந்த இடத்திலேயே இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இதனைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினருமே மேற்கொண்டதாகக் குற்றம்சாட் டப்படுகிறது.
இந்த விடயம், கடந்த 2011 ஆம் ஆண்டுக்குரிய எமது மீளாய்வுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அது அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.நான் இலங்கையைப் பிரதி நிதித் துவம் செய்து கலந்துகொண்டுள்ள எந்தவொரு உறுப்பினரிடம் இருந்தாவது இதற்குரித்தான பதில்களையும் விவரங் களையும் கேட்டிருந்தேன்.
ஆனாலும், இலங்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த அங்கத்தவர்களில் ஒருவரிடம் குறிப்பாக எனது கேள்விகளை முன்வைத்தேன்.அவர் தான் இலங்கை தேசிய புலனாய்வு தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ்.அவர் இந்த அமர்வுகளில் கலந்துகொண் டுள்ள போதும் பதிலேதும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசின் மீதான நம்பிக்கையீனங்கள்
மேலும், “போர் முடிவடைந்த பின்னரான உடனடிக் காலப்பகுதியில் சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி பிரிவினரின் நடவடிக்கைகளை அந்தக் காலப்பகுதியில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த தாங்களே மேற்பார்வை செய்தீர்கள்.
மனிக்பாம் முகாமிலும் வவுனியா மருத்துவமனையிலும் விசாரணை செய்யப்பட்ட முறை குறித்த தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா எனவும் கேட்டிருந்தேன்.
இந்த இரண்டு இடங்களிலும் சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி பிரிவுகள் மேற்கொண்ட சித்திரவதைகள் குறித்து ஐ.நா செயலாளர் நாயத்தின் நிபுணர்கள் குழு முன்வைத்த அறிக்கையில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த கேள்விகளை முன்வைக்கிறேன்.
அவை இடம்பெற்ற நேரம், அவற்றை மேற்பார்வை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்பவற்றுடன், குறித்த இடங் களில் 2009 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தாங்கள் பிரசன்ன மாகியிருந்தீர்களா என்றும், அவை குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தேன்.
ஆனால் அவற்றுக்கான எந்தவிதமான பதில்களும் தரப்படவில்லை.” என்ற விதமாகவும் இலங்கை அரசின் மீதான நம்பிக்கையீனங்களை எடுத்துரைத்திருந்தார்.
குற்றச் செயல்களின் இருப்பிடம்
தவிர, “ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் ஓ.ஐ.எஸ்.எல் அறிக்கையின் 134 ஆவது பந்தியின் அடிப்படையின் திட்டமி டப்பட்டபடி மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை விசாரணை செய்யும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பு சி.ஐ.டி யினரே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கொழும்பு பொலிஸ் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள நான்காம் மாடி குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடம், குறிப்பாக தடுப்புக்காவலில் உள்ள பலர் விசாரணைக் காக கூட்டிச் செல்லப்படுவதற்கு பெயர்போன இடம் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சி.ஐ.டியின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக சிசிர மெண்டிஸ் கடமையாற்றினார் என்றும், அந்த அறிக்கை தெரிவிக்கிறது.மேலும் அறிக்கையின் 153 ஆவது பந்தி, தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் பொதுவாக அறியப்பட்ட இடமாக வவுனியாவில் உள்ள ஜோசப் இராணுவ முகாம்,கொழும்பிலுள்ள சி.ஐ.டியினரின் நான்காம் மாடி போன்ற இடங்களில் சித்திரவதை செய்வதற்கான உபகரணங்களுடன் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை, ஏற்கனவே நன்கு திட்டமிட்ட வகையில் சித்திரவதை ஒரு ஆயுதமாக இலங்கை அரச படை களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதனை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உபகரணங்கள் குறித்தும் விவரிக்கி றது.இது மிகவும் பயங்கரமானது.
ஆகவே உங்களைப் போன்ற அனுபவம் கொண்ட ஒருவரை சித்திரவதைக்கு எதிரான குழுவின் முன்பாக நாம் கொண்டிருப்பது வழமைக்கு மாறானது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடே இலங்கை அரசு கொண்டுள்ள நல்லிணக்க வெறுமையின் செயலற்ற தன்மையை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியிருந்தார்.
சிறப்பு அறிக்கையாளர் ‘யுவான் இ மென்டெஸ்’ இன் வெளிப்பாடுகள்
இதேவேளை சித்திரவதை, மனிதாபிமானமற்ற முறையில் இழிவாக நடத்துதல் அல்லது தண்டனை வழங்குதல் முதலியவற்றுக் கான சிறப்பு அறிக்கையாளர் ‘யுவான் இ மென்டெஸ்’ கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கைக்கு ப் பயணம் மேற்கொண்டு வெளிப்படுத்திய அறிக்கையில் பல விடயங்களை தெளிவுபடச் சுட்டிக்காட்டி யுள்ளார்.
பிரதானமாக, “கைதாகித் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஆண்கள், பெண்கள், இளவயதினர் என அனைவரும் பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான நம்பகரமான சாட்சியங்கள் விசேட ஆணையாளருக்குக் கிடைக்கப் பெற்றன.
அவற்றுள் அதிக எண்ணிக்கையிலானவை, சட்டவைத்திய மதிப்பீடுகளுடனும் , ஆதாரத்துடனும் கூடியவை. இவ்வகையான துஷ்பிரயோகங்கள் நுண்ணாய்வு செய்யப்படவுமில்லை. வழக்குத் தொடரப்படவுமில்லை.
விசேட ஆணையாளருக்கு கிடைக்கப் பெற்ற சோகச் சாட்சியங்களுக்கு அமைவாக ஒரு இளம் பெண் மூன்றரை வருட காலம் பல்வேறு இராணுவ முகாம்களில் பாலியல் அடிமையாக இருந்ததை வெளிப்படுத்தியுள்ளார்.
நீதித்துறையினதும் வழக்குத் தொடுநர்களினதும் வகிபாகங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள அவருடைய அறிக்கை, “சித்திரவதைகள் மற்றும் கொடூரமான மனிதாபிமானமற்ற வகையில் கீழ்த்தர மாக நடத்துதல் அல்லது தண்டித்தல் தொடர்பான பன்னாட்டு சட்டத்துக்கு அமைவாக கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சுயாதீன மான பக்கச் சார்பற்ற நீதித்துறை இருப்பது அவசியம்.
அத்துடன் அவ்வாறு சித்திர வதை செய்யப்பட்டதாக அல்லது வற்புறுத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு களை பதவிநிலையில் இருந்து விசாரணை செய்யக் கட்டளையிட்டு, அது தொடர்பான சகல பாதுகாப்பையும் நிலைநாட்டக்கூடிய தாக இருத்தல் வேண்டும்.
இவ்விடயத்தில் பொறுப்புக் கூறுதலும் தடுப்பதுமான இரண்டு கடப்பாடுகளும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதித்து றைக்கும் உள்ளன. ஆனால், இலங்கை அரசு கொண்டுள்ள நடைமுறையில் நீதிபதிகள் இது குறித்து அதிக சிரத்தை உள்ளவர்களாகவும், ஆதாரங்க ளைத் தேடிச்செல்பவராகவும் இல்லை.
அதாவது குற்றவியல் வழக்குகளில் தீர்மானம் எடுத்தல், தனித்து பொலிஸாரால் சேகரிக்கப்பட்டு முன்வைக் கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் மாத்திரமே அவர்கள் தீர்மானம் எடுக்கிறார்கள்.” என்பதை சுட்டிக் காட்டி யுள்ளது.
நல்லாட்சியின்
நல்லிணக்கமற்ற பாணி
இந்தநிலையிலே அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முன்னாள் அரச தலைவரும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தவிசாளருமான சந்திரிகாவிடம், “போரினால் துவண்டு போயுள்ள வடக்குப் பகு திப் பெண்கள் மீது இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அவர்களோடு சேரந்து இயங்கும் அரச அதிகாரிகள் தொடர்ந்தும் பாலியல் துஷ்பிரயோகங்ளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான பெண்கள் மேலும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
தனித்து வாழ்கின்ற பெண்கள், பொருளாதார ரீதியாக பின்னடைவில் உள்ளனர். அவர்களைக் குறிவைத்து பாலியல் ரீதியான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இவர்களின் அலைபேசி இலக்கங்களைத் தெரிந்து கொள்ளும் இவர்கள், நாளடைவில் அலைபேசி ஊடாக நட்பை ஏற்படுத்துகின்றனர்.
இராணுவம் மற்றும் பொலிஸார் தமிழ் பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்முறைகளை மேற்கொள்கின்றனர். பாதுகாப்புத் தரப்பினரின் அனுசரணையுடன் அங்குள்ள ஒரு சிலரும், பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்புத் தரப்பினரின் ஆதிக்கம் இருப்பதால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை. உரிய நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலமை நாம் பொதுமக்களை சந்திக்கும் போது அறிந்து கொண்ட விடயங்களாகும்.
மேலும் போரின் பின்னர் வவுனியா முகாம்களில் இருந்தவர்களின் குடும்பங்களில், குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் இடம்பெற்றுவருகின்றன.எமது பிரதேசங்களில் உள்ள காணாமல் ஆக்கப்படவர்களின் உறவுகளை நாம் சந்தித்த போது தமது பிள்ளைகள் ஏதோ ஒரு இடத்தில் உயிருடன் இருகின்றார்கள் என்ற நம்பிக்கையிலேயே ஒளிப்படங்களுடன் காத்திருக்கின்றோம் என கூறுகின்றனர்.
அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர்.” என்ற தகவலை உளவியல் செயற்பாட்டாளர்களும் பொது அமைப்பினரும் எடுத்துரைத்திருந்தனர்.
ஆனாலும் இதன் போது குறுக்கிட்ட முன்னாள் அரச தலைவர் சந்திரிகா, ‘‘காணாமற் போனவர்கள் தொடர்பில் காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டு விட்டது தானே? அவர்கள் அதனைப் பார்த்துக் கொள்வார்கள்’’ என்று தெரிவித்ததோடு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட் டுக்களுக்கு பதில் எதனையும் வழங்கவில்லை.
தேசிய ரீதியா நல்லிணக்கம் சாத்தியமா?
ஆக, அரசின் இத்தகு செயற்போக்கு, மாற்றம் பெற வேண்டும். வரலாற்று ரீதியானதும், அரசியல் ரீதியானதுமான தமிழர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளின் சூழமைவுகள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
மனித உரிமைகள் சபையின் இல 30(1) கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குடிமக்களின், குறிப்பாக, சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட வர்களின் ஒருமித்த நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்.
உண்மை யைக் கண்டறிதல், நடந்தவற்றை வெளிப்படுத்துதல், பாரதூரமான குற்றம் செய்தவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை, பாதிப்புற்றோருக்கு இழப்பீடு வழங்குதல் முதலானவற்றை பன்னாட்டு பிரமாணங்களுக்க மைவாக மேற்கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை சிபாரிசு செய்துள்ள பல்வேறு நெறிமுறைகளை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்க வேண்டும்.
தமிழர்களுக்கான தீர்வுகளை வழங்கி சமூகங்களின் மத்தியில் தேசிய ரீதியான நல்லிணக்கத்தைப் பலப்படுத்த வேண்டும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!