அக்டோபர் மாதத்தில் தீவிரமடையும் கொரோனா 3-ம் அலை!

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் கொரோனா இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பேராசிரியர்கள் மதுக்குமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழு இது குறித்த ஆய்வை நடத்தினர்.

கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3-வது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அலையின் உச்சபட்ச தொற்று எண்ணிக்கை ஒன்றரை லட்சம் வரை போகும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2-வது அலையின் போது தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டியது போன்ற அளவுக்கு 3 ஆவது அலை தீவிரமாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

கொரோனா தொற்று அதிகம் பாதித்த கேரளா மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் 3-வது அலையின் போது நிலைமை தலைகீழாக மாறும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.

மே 7 அன்று, இந்தியா 4,14,188 கொரோனா பாதிப்புகளை பதிவு செய்தது, இது 2-வது அலையின் போது அதிக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.

பத்து மாநிலங்களில் புதிய தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு இருப்பதாக ஒன்றிய அரசு சமீபத்தில் கூறியது. 10 சதவிகிதத்திற்கும் அதிகமான நேர்மறையான விகிதம் கொண்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!