லடாக் எல்லையிலிருந்து இந்திய, சீன படை வாபஸ்!

கடந்த ஆண்டு ஜூன் 15-ம்தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவிய சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டினர். அப்போதுமிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 60 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்தது.

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட 6 முனைகளில் மட்டும் படைகள் விலக்கி கொள்ளப்படவில்லை. இந்த சூழலில் கடந்த ஜூலை 31-ம் தேதி இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் 12-வது சுற்று பேச்சு நடத்தினர்.

இதில் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. கல்வான், பான்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகள், ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இன்னமும் பதற்றம் நீடிக்கிறது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளில் இந்த பகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

”எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. ஆனால் சீனாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் இந்திய ராணுவம் எதற்கும் தயார் நிலையில் உள்ளது” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!