அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு லட்சம் பைசர் கொரோனா தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட குறித்த தடுப்பூசிகள் கட்டாரில் இருந்து இன்று அதிகாலை 2.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி சுமார் 550 கிலோகிராம் நிறையுடைய தடுப்பூசிகள் ஏழாவது கட்டமாக இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த தடுப்பூசிகள் விசேட லொறிகள் மூலம் களஞ்சிய படுத்தல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மேல்மாகாணத்தில் முதலாவது அளவு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதை கடந்த அனைவருக்கும் நாளை முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 9 0 6 என்ற இலக்கத்தின் ஊடக தொடர்பு கொண்டு இதற்காக தமது பெயரை பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துளளது.
அத்துடன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியுமான சிறந்த தீர்வு தடுப்பூசியே என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!