இரகசியமாக திறக்கப்பட்ட காணாமற் போனோருக்கான அலுவலகம்!

கிளிநொச்சியில் கடந்த 12ஆம் திகதி மிகவும் இரகசியமாக திறக்கப்பட்ட காணாமற் போனோருக்கான அலுவலகம், எதிர்வரும் ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான ஒரு நாடகமே என, வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவி தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை நாம் தொடர்ச்சியாக எதிர்த்தே வந்துள்ளோம் என்றும் இதனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

காணாமற் போனோருக்கான அலுவலகம் மீது, சர்வதேசம் மெல்லிய நம்பிக்கை வைத்திருந்ததாகத் தெரிவித்த அவர், எனவே தாம் காணாமற் போனோருக்கான அலுவலகத்தின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதற்காக, 2019.07.20 அன்று பலத்த ஆதாரங்கள் உள்ள ஐந்து சம்வங்களை இந்த அலுவலகத்துக்கு வழங்கினோம் என்றும் கூறினார்.

“இதனை அப்போது தலைவராக இருந்த சாலிய பீரிசும் ஏற்றுக்கொண்டு தீர்வை தருவதாக கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அவற்றுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை. இதன் மூலம் இந்த அலுவலகத்தினால் எதுவும் ஆகப்போதில்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்தது.

“இந்த நிலையில் தற்போது கொரேனா பரவல் காரணமாக ஒன்றுகூடவோ, எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தவோ, முடியாதவாறு சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துவிட்டு இரகசியமாக கிளிநொச்சியில் காணாமற் போனோருக்கான அலுவலகத்தை திறந்து செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

“யாருக்காக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டதோ அவர்கள் எவருக்கும் தெரியாது இதனை கிளிநொச்சியில் இரகசியமாக மேற்கொண்டமைக்கான காரணம் என்ன?” எனவும் கேள்வி எழுப்பினார்.

சர்வதேசத்தையும், ஜெனீவாவையும் எதிர்கொள்வதற்காக அரசாங்கம் போடும் நாடகமே இது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே நாம் கிளிநொச்சியில் இரகசியமாக ஆரம்பிக்கப்பட்ட காணாமற் போனோருக்கான அலுவலகத்தை எதிர்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!