விடுதலைப் புலிகளை நினைவு கூர ஒருபோதும் அனுமதியோம்!

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இலங்கையில் நினைவுகூர ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் பங்கேற்ற இரண்டு யுவதிகளின் கையடக்கத் தொலைபேசியை காவல்துறையினர் பறித்ததை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டுள்ள அவர், அங்கு சட்டத்தரணியாக முன்நின்றவரையும் கைது செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

“திலீபன் என்பவரை நினைவுகூரும் நிகழ்வு நடந்தது. இதுபோன்ற கொவிட் நெருக்கடி மத்தியில் வெளியே நடமாடவும் அதேபோல விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்களையே அன்று காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

திலீபன் நிகழ்வில் இரண்டு யுவதிகள் ஊடகப் பெயரைப் பயன்படுத்தி பங்கேற்றிருந்தனர். இறுதியில் ஊடக அடையாள அட்டையை கோரியபோது அவர்களால் அதனை சமர்ப்பிக்க முடியாமற்போனது. உண்மையில் அவர்கள் ஊடகவியலாளர்கள் அல்லர். அதன்பின்னர்தான் அவர்களது கையடக்கத் தொலைபேசியை காவல்துறையினர் பெற்றனர்.

அதற்கெதிராக அவர்கள் கூச்சல் எழுப்பினார்கள். அவர்களின் செயற்பாடு காவல்துறையினரது கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவே இருந்தது. அந்த சம்பவம் பற்றி அறிக்கையை நான் கேட்டுள்ளேன். சட்டத்தை சரிவர நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். அந்த இடத்தில் ஆங்கிலத்தில் உரத்த குரலாய் ஒருவர் கருத்து வெளியிட்டார். அவரையும் கடமைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைது செய்திருக்க வேண்டும்.

எனினும் குறித்த யுவதிகளை ஸ்ரீலங்கா காவல்துறையினர் இடையூறு செய்யவில்லை. அவர்கள்தான் திலீபனின் நினைவுகூரலில் பங்கேற்றிருந்தனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தவன். அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த விடயங்கள் எனக்குத் தெரியும்.

மாணவர்களை இழுத்துச் சென்றமை, பிள்ளைகளை இழுத்துச் சென்றமை, வரி செலுத்துவோருக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் என பல விடயங்களை அவதானித்தேன். இந்நிலையில் போரில் உறவினர்கள் உயிரிழந்திருந்தால் வீட்டில் வைத்து விளக்கு ஏற்றி அவர்களை அஞ்சலிக்கலாம். ஜேர்மனியில் ஹிட்லரை நினைவுகூர முடியாது. அந்த வகையில் விடுதலைப் புலிகளை நினைவுகூர நாம் இடமளிக்கமாட்டோம்”

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!