அமைச்சு பதவியை இராஜினாமா செய்யவுள்ள சுகாதார அமைச்சர்?

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ,தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அமைச்சில் கடமைகளை செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவே அவர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் இவ்வாரம் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன (Dr. Prasanna Gunasena) தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) அனுப்பி வைத்திருந்தார்.

குறித்த பதவிக்காக மற்றொருவர் நியமிக்கப்படும் வரை தொடர்ந்தும் பதவியில் நீடிக்குமாறு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேனவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்த நிலையிலேயே தற்போது கெஹெலிய ரம்புக்வெல்லவின் பதவி விலகல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த காலப்பகுதியிலிருந்து தற்போது வரை சுகாதாரத்துறையினை சேர்ந்த பலர் தமது பதவியினை இராஜினாமா செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!