உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினியின் கருத்து குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நியாயாதிக்க மன்றத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள காரணிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சலேவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச பிரஜைகளை தெளிவுப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று சர்வதேச நியாயாதிக்க மன்றத்தினால் கடந்த 23 ஆம் திகதி காணொளி தொழிநுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது.

இதன்போது முன்வைக்கபட்ட உண்மைக்கு புறம்பான தரவுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சலேவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயங்கரவாதத் தாக்குதலின் சுத்திரதாரியான சஹாரான் ஹாஷிமுக்கு புலனாய்வுப் பிரிவினரால் நிதி மற்றும் முக்கிய உதவிகள் வழங்கபட்டுள்ளதாக குறித்த கலந்துரையாடலில் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென குற்றப்புலனாய்வு பிரிவு இதன்போது தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!