நாட்டின் வன பாதுகாப்புக்காக கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக வழங்கிய கனேடிய தம்பதி!

கனேடிய தம்பதி நாட்டின் வன பாதுகாப்புக்காக $1 மில்லியன் பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மற்றும் வன பகுதிகளை தங்களின் இதயமாக கருதும் மேற்கு வான்கூவரை சேர்ந்த ஆல் கோலிங்ஸ் – ஹிலாரி ஸ்டீவன்ஸ் தம்பதியே இச்செயலை செய்துள்ளனர்.

அதன்படி Nature Conservancy of Canada என்ற கனடாவின் மிக முக்கியமான நிலங்கள், நீர் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க உதவும் இலாப நோக்கற்ற அமைப்புக்கு $1 மில்லியன் பணத்தை (கனேடிய டொலர்கள்) அவர்கள் கொடுத்துள்ளனர், இது இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 16 கோடி ஆகும்.

இந்த பணமானது பிரிட்டீஷ் கொலம்பியா முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தனியார் நிலங்களை வாங்குவதற்கும், வேறு யாராவது வந்து நிலத்தை மேம்படுத்துவதற்கு முன்பு அவற்றைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

இது தொடர்பாக தம்பதி கூறுகையில், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பான தற்போதைய தேவைகளின் போதும் கனடாவுக்கு குறைவான நிதியே கிடைக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

எங்கள் எண்ணம் என்னவென்றால், நாங்கள் கொடுக்கும் நன்கொடையை பார்த்து மற்றவர்களும் அது போல நிறைய கொடுக்க முன் வர வேண்டும். எங்களின் பணம் சுற்றுசூழல், இயற்கை, வனப்பகுதி நிலங்கள் போன்றவைகள் பாதுகாக்க பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறோம் என கூறியுள்ளனர்.

Nature Conservancy of Canadaன் பிரிட்டீஷ் கொலம்பியா மண்டல தலைவர் நான்சி நியூஹவுஸ் கூறுகையில், ஆல் கோலிங்ஸ் – ஹிலாரி ஸ்டீவன்ஸ் தம்பதியின் பங்களிப்பை அன்புடன் வரவேற்கிறேன்.

நிலப் பாதுகாப்பிற்காக இந்த நெகிழ்வான நிதியை நிறுவியதன் மூலம், அவர்கள் நம்பிக்கையையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் தாராள மனப்பான்மை கனடா மற்றும் உலகில் உள்ள மக்களுக்கும் இயற்கைக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் என கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!