நாட்டுக்குத் தீவைக்கவே செயலணி!

ஜனாதிபதி சகல அதிகாரங்களையும் செயலணிகளை கொண்டு இயக்கிக்கொண்டுள்ளார் எனவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்கி நாட்டையே தீ வைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் சபையில் குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல, இந்த அரசாங்கத்திற்கு இனவாதத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களின் துரும்புச்சீட்டு இனவாதம் மட்டுமேயாகும் எனவும் விமர்சித்தார்.
    
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் எமக்கு இன்னமும் வழங்கவில்லை. பிரதமர் சபையில் உள்ளார், அவரிடமே இதனை கேட்கின்றோம். சமல் ராஜபக் ஷ உபகுழு அறிக்கையை எமக்கு வழங்க முடியுமா முடியாதா? ஏற்கனவே முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மாற்றப்பட்டு புதிய பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரை இலக்குவைத்து அவர்களை தெரிவுசெய்து வழக்கு தொடுக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முதலில் தகவல் தெரிந்தவர் மீது வழக்கு தொடுக்கப்படாது ஜனாதிபதியை குற்றவாளியாக்குவதன் மூலமாக இந்த வழக்கு தோற்கடிக்கப்படும். அதுமட்டுமல்ல ஒரு சிலரது தகவல்களை அரசாங்கம் அழித்துவிட்டது. ஆகவே நீதிமன்றத்தை மிதித்துக்கொண்டு நியாயத்தை பெற்றுக்கொடுக்க முடியாது.

மேலும், சகல அமைச்சுகளுக்கும் செயலணிகள் உருவாக்கப்பட்டு அமைச்சரவையை பலவீனப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி சகல அதிகாரங்களையும் செயலணிகளை கொண்டு இயக்கிக்கொண்டுள்ளார். அதேபோல் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்கி நாட்டையே தீ வைக்க முடிவெடுத்துள்ளனர்.

இனவாதத்தை உருவாக்கி நாட்டை தீ வைக்கவே நினைக்கின்றனர். இந்த அரசாங்கத்திற்கு இனவாதத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களின் துரும்புச்சீட்டு இனவாதம் மட்டுமேயாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!