மாவீரர் தின தடைக்கு எதிராக சிறிகாந்தா மனு!

மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நீக்குமாறு கோரி, சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுத் தொடர்பாக பதிலளிக்க, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மாவீரர்நாள் அனுட்டிப்பிற்கு தடைவிதிக்க கோரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம், கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதில், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமாகி என்.சிறிகாந்தாவிற்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மன்றில் முன்னிலையாகி, தன் மீது விதிக்கப்பட்ட தடைக்கட்டளையை நீக்க வேண்டுமென சமர்ப்பணம் செய்தார். அந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, பிரதிவாதிகள் மன்றிற்கு அழைக்கப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்படவில்லையென்பதை சுட்டிக்காட்டிய அவர், பிரிவு 106இன் கீழ், அந்த கட்டளையை திருத்தவோ, மாற்றம் செய்யவோ முடியுமென்பதால், தடையுத்தரவை நீக்க வேண்டுமென சமர்ப்பணம் செய்தார்.

இதையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மதியம் இன்று 2 மணிக்கு முன்னிலையாகி, பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!