வைத்தியசாலைகள், பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் : கஜேந்திரகுமார்

மாகாண சபைகளுக்குக் கீழ் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர் என்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு சார் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பதவிகளில் பெரும் பற்றாக்குறைக் காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்.
இங்குக் காணப்படும் பதவிநிலை வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 117 வைத்தியசாலைகளில், 15 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை. மாகாண சபைகளுக்குக் கீழ் உள்ள வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதை மக்கள் விரும்புகிறார்கள்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 50 சதவீதமானவர்கள் எந்நேரமும் விடுமுறையில் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!