இலங்கையும் பாகிஸ்தானும் ஒன்றல்ல! – சாணக்கியன் கருத்தை மறுத்த வீரவன்ச.

“இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்” என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
    
“சிற்சில அரசியல் முரண்பாடுகளால் ஏற்பட்ட சில சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. அதாவது விடுதலைப்புலிகள் வடக்கில் இராணுவத்தைக் கொல்லும்போது, அதனால் கொதிப்படைந்த தெற்கு மக்கள் குழப்பமடைந்திருக்கலாம். அதேபோல் யாழ். நூலகம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரசியல் பிளவுகளால் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற்றன.

ஆனால், பாகிஸ்தானில் நடந்த சம்பவம் அவ்வாறு அல்ல. சுவரில் இருந்த போஸ்டரை அகற்றியதால் அந்த நபரைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். இலங்கையில் நடந்தவை சரியென நான் கூற விளையவில்லை. ஆனால், இரண்டையும் ஒப்பிட்டு சமப்படுத்த முற்பட வேண்டாம்.
சாணக்கியன் நீங்கள் கண்டியில் படித்த எம்.பி., கண்டி மக்கள் உங்களுடன் எப்படிப் பழகினார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே, நியாயமாக உரையாற்றுங்கள்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!