ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஜனாதிபதி? பாதுகாப்பு செயலாளர் கூறிய விடயம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் பாதுகாப்புச் செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர் இந்த சம்பவங்கள் தொடர்பில் விரிவான அடிப்படையில் விசாரணை நடாத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான லாபங்களை ஈட்டிக் கொள்ளும் நோக்கில் சில தரப்பினர் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, ஜனாதிபதிக்கு சேறு பூசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களிலும் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஸ் சாலே பற்றிய பிரச்சாரங்களும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

சாலே என்பது முஸ்லிம் பெயர் என்றாலும் அவர் பௌத்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் பிள்ளைகள் இருவரினதும் பெயர்கள் சிங்களப் பெயர்கள் எனவும் தமிழ் மொழியோ அரபி மொழியோ அவருக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் அடிப்படைவாத விடயங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!