உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய தென்கொரிய பால் உற்பத்தி நிறுவனம்!

தென்கொரியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக ‘சியோல் மில்க்’ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    
சியோல் மில்க் நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில் பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில், ஒரு நபர் காட்டுப்பகுதியில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்கிறார்.

அங்கு புல்வெளி நிறைந்த பகுதியில் சில பெண்கள் வெள்ளை நிற உடையணிந்து ஓடையில் ஓடும் நீரை குடிப்பது போன்றும், யோகா செய்வது போன்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்கிறார். அப்போது, இயற்கையை அதன் தூய்மையில் பாதுகாக்கும் ஒரு அழகிய இடத்தில் அவற்றை கேமராவில் படம்பிடிப்பதில் இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். இயற்கையில் இருந்து தூய்மையான நீரை அவர்கள் குடிக்கின்றனர்.

இயற்கையான உணவுகளையே உட்கொள்கின்றனர். அமைதியான சூழ்நிலையில் அமைதியாக வாழ்கின்றனர். நான் அவர்கள் அருகில் கவனமுடன் செல்ல முயற்சிக்கிறேன்’ என்கிறார்.
அப்போது, அவர் கிழே கிடக்கும் மரத்துண்டில் தனது காலை வைத்ததால் அது உடைகிறது. அந்த சத்தத்தை கேட்ட அப்பெண்கள் திடீரென பசு மாடுகளாக மாறுகின்றனர். இதனைதொடர்ந்து தூய்மையான நீர், ஆரோக்கியமான உணவு, 100 சதவிகிதம் சியோல் பால். இயற்கையான சூழ்நிலையில் இருந்து இயற்கையான பால்’ என அந்த விளம்பரம் முடிவடைகிறது.

பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து காட்சிப்பொருளாக்கி பால் விளம்பரம் செய்ததாக சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மீது உலக அளவில் கண்டனம் எழுந்தது. சியோல் பால் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என தென் கொரியாவில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. இதனால், சியோல் பால் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை பெருமளவு சரிந்தது.

உலகலாவிய சர்ச்சையை தொடர்ந்து பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து விளம்பரம் எடுத்ததற்க்கு சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மன்னிப்புக்கோரியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!