‘இதை செய்யாவிட்டால் ஒமைக்ரான் உங்களை கொல்லும்’ – ஜோ பைடன் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய், உலக நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நாடாக அமெரிக்கா இன்றளவும் திகழ்கிறது. அங்கு இதுவரையில் 5 கோடியே 12 லட்சத்து 72 ஆயிரத்து 861 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 8 லட்சத்து 10 ஆயிரத்து 45 பேர் பலியாகியும் இருக்கின்றனர்.
    
இப்போது ஒமைக்ரான் தொற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது அங்கு கொரோனா கண்டறியப்படுகிற 73 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது அந்த நாட்டு மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அங்கு இன்னும் தடுப்பூசி போடுவதில் படை வீரர்களிடம் கூட தயக்கம் காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்தவாறு ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் தடுப்பூசி போட வில்லை என்றால், நீங்கள் (கொரோனா தொற்று) நோய் தாக்குதலுக்கு ஆளாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் தொற்று நோய்க்கு ஆளானால் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் உள்பட மற்றவர்களுக்கு பரப்புவீர்கள். நாம் அனைவரும் ஒமைக்ரான் தொற்று பற்றி கவலை கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பதற்றம் அடையத்தேவையில்லை. ஆனால் தடுப்பூசி போடாத நிலையில், தொற்று ஏற்பட்டால் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை வரும். மரணம் அடையவும் வாய்ப்பு உள்ளது.

முழுமையாக தடுப்பூசி (2 டோஸ் ) செலுத்தியவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். இது தீவிர பாதிப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஒமைக்ரான் தொற்றைப் பொறுத்தமட்டில் அது எளிதாக பரவுகிறது. முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாக நேரிட்டாலும், அவர்கள் தீவிரமான நோயில் இருந்தும், மரணத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். எனவே அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் தேர்வு, வாழ்க்கைக்கும், மரணத்துக்கும் இடையேயான வித்தியாசமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கு தனது உரையின்போது ஜோ பைடன் பாராட்டு தெரிவித்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு விரைவாக தடுப்பூசி கண்டுபிடித்து, மக்களுக்கு போடத்தொடங்கியதற்காக அவர் டிரம்ப் நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “நான் தெளிவாகக்கூறுகிறேன். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை பெற்ற முதல் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதற்காக நான் முந்தைய நிர்வாகத்துக்கும், (டிரம்ப் நிர்வாகம்) அறிவியல் சமூகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டார்.

முந்தைய ஜனாதிபதி டிரம்ப் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக கூறிய 2 நாட்களுக்கு பின்னர் இந்த கருத்தை ஜோ பைடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!