தண்டனை வழங்கவே நீதிமன்றங்கள் இருக்கின்றன:பொலிஸாரை கடுமையாக சாடிய நீதவான்

குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவியல் விசாரணை திணைக்களம் வழங்க முடியாது எனவும் அதற்கு நீதிமன்றங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளை தண்டிக்கவே பொது மக்களின் பணத்தில் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, பொலிஸாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே நீதவான் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

எஸ்ரா சேனேகா தடுப்பூசி மருந்துடன் வேறு மருந்தை கலந்து மக்களுக்கு செலுத்துவதாக சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்டு மக்களுக்கு பொய்யை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் மகனது செல்போனை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைப்பற்றினர்.

எனினும் இதுவரை அது சம்பந்தமான விசாரணைகளை நடத்தாது குறித்து நீதவான் குற்றவியல் விசாரணை திணைக்களத்தை சாடியதுடன் அந்த சிறுவனின் செல்போனை எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரான அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

விசாரணைகளின் போது சந்தேக நபரின் மகனது செல்போனை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை நடத்தி வந்தனர். சிறுவன் இந்த செல்போன் மூலமே இணையத்தளம் வழியாக கல்வி கற்று வந்துள்ளார்.

பொலிஸார் செல்போனை கைப்பற்றியுள்ளதால், சிறுவனால் பாடங்களை கற்க முடியாதிருப்பதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்தே நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொலிஸ் சுற்றறிக்கைக்கு அமைய வழக்கு விசாரணைகள் நடைபெறும் நாட்களில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதானிகள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.

எனினும் இந்த வழக்கு விசாரணையின் போது பிரதானிகள் எவரும் சமூகமளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றம் தேவைக்கு அதிகமாக காலத்தை வழங்கி உள்ளது எனவும் நீதவான் புத்திக ஸ்ரீ ராகல குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் காணொளி மூலம் பொய்யை கூறிய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் அசேல சம்பத் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி இரவு பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து மறுநாள் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!