பதாகையை அகற்ற முற்பட்டதால் பதற்றம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் பதாகையை அகற்ற முற்பட்ட பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே நேற்றிரவு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
    
குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து பல்கலைக்கழகத்தின் முன்பாக நேற்று பிற்பகல் 5 மணி முதல் சிவில் உடையில் புலனாய்வு பிரிவினர் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாலை ஏழு முப்பது மணி அளவில் முச்சக்கரவண்டியில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிசார் குறித்த பதாகையை கழற்றி முச்சக்கர வண்டியில் வைக்க முற்பட்டனர்.

இதன்போது எதற்காக பதாகையை கழற்றுகிறீர்கள் என மாணவர்கள் பொலிசாரிடம் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து தங்களுக்கு இதனை அகற்றுமாறு பணிப்பு விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவர்கள் பொலிசாருடன் வாக்குவாதப்பட்ட நிலையில் உங்களுக்கு பதாகை வேண்டுமெனில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தாருங்கள் என தெரிவித்த பொலிசார் சம்பவ இடத்தை நீங்கிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு நிற துணி கட்டப்பட்டு சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!