மீண்டும் எரிபொருள் விலையேற்றத்திற்கு அனுமதி கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! அரசின் நிலைப்பாடு என்ன?

எரிபொருட்களுக்கான விலையை உயர்த்த அனுமதிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்து வரும் கோரிக்கையை நிதி அமைச்சு உதாசீனம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்து செல்லும் நிலையில் உள்நாட்டிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூரியுள்ளது.

எனினும், தமது கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 108 முதல் 109 டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே விலையேற்றத்திற்கு அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த மாதம் முழுவதும் விலை அதிகரிக்கப்படாவிட்டால் ஒரு லீற்றர் பெற்றோலில் 48 ரூபா 30 சதமும், ஒரு லீற்றர் டீசலில் 15 ரூபா 68 சதமும் நட்டம் ஏற்படும் என பெற்றோலிய வளக்கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் ஏற்கனவே எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!