தஞ்சையில் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

தஞ்சை மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிலாபத் இயக்கம் என்ற அமைப்பானது பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்து சமயத்தை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்டும் வந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மதுரையில் கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல்காதர் என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


அதன் தொடர்ச்சியாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிலாபத் இயக்கத்தில் தொடர்புடைய திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் தஞ்சை மகர்நோன்புசாவடி தைக்கால் தெருவை சேர்ந்த மெக்கானிக் அப்துல் காதர் (வயது 49), அதே பகுதியை சேர்ந்த முகமது யாசின் (30), காவேரி நகரை சேர்ந்த அகமது (37) ஆகிய 3 பேருக்கும் கிலாபத் இயக்கத்தில் தொடர்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று காலை தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர்.

வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர். ஏதாவது ஆவணங்கள் கிடைக்கிறதா என சோதனையிட்டனர். அவர்கள் 3 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சோதனை, இதையொட்டி 3 வீடுகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!