அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே அவசியம்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுமானால், இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார் .

    
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,”சர்வகட்சி மாநாட்டின்போது புலம்பெயர் தமிழர்களின் முதலீடு தொடர்பில் பல தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்தனர். நாமும் அது பற்றி கதைத்தோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்று நான் சுட்டிக்காட்டினேன்.

புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான பாலமாக இருப்பதற்கு நாம் தயார்.

இலங்கையின் பொருளாதாரத்தை விடவும் புலம்பெயர் தமிழர்களின் பண பலம் உள்ளது.
எனவே, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலான அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமானால் நிச்சயம் உதவி கிட்டும்.

ஆனால், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே அவசியம். மாறாக ஆளுநர் வசம் அதிகாரங்கள் இருக்கக்கூடாது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் வசமே அதிகாரம் இருக்க வேண்டும்” – என்றார்.

இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமை தவறான முடிவாகும். அரசியல் இலாபத்துக்காகவே அந்தக் கட்சியினர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார் .
”அரசமைப்பின் பிரகாரம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது. இந்த விடயம் கூட சஜித் பிரேமதாஸவுக்குத் தெரியவில்லை” என்றும், “ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது நாம் அரசியல் தீர்வு பற்றியே பேச்சு நடத்துவோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!