கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகளுடன் ஜெய்சங்கர் பேச்சு!

இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை கொழும்பில்,நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
    
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து, சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது குறித்து கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன், திகாம்பரம், வி ராதாகிருஷ்ணன், உதய குமார் ஆகியோரையும் சந்தித்து, இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் சமூக-பொருளாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் அபிவிருத்திக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோருடன், மலையகத்தில் இந்தியாவின் வளர்ச்சி ஈடுபாட்டை மீளாய்வு செய்ததுடன், இந்தியாவின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!