தொடர்ந்து நீடிக்கும் வன்முறைகள்!


பெரியமுல்ல மற்றும் கட்டுவாப்பிட்டிய உட்பட நீர்கொழும்பில் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
    
பெரியமுல்ல பிரதேசவாசிகள் அவேந்திரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அங்கொடையில் நேற்று மாலை பொலிஸ் ஜீப் வண்டியொன்றை கொளுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அடுத்து, வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு அருகில் நேற்றுமாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் காரியாலயம் நேற்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரின் களுதாவளை காரியாலயத்தின் பெயர்பலகைகள் கழற்றி தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமான உணவகத்திற்கு போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. சிங்கராஜா பகுதியில் அமைந்துள்ள யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமானதாக கூறப்படும் உணவகம், தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பிலான காணொளியும் வெளியாகியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!